Tag Archives: திருமணம்
“ஆண்கள்”
முப்பது வயதை கடந்து விட்டது
முன் நெற்றில் முடியும் கொட்டிவிட்டது
செல்லத் தொப்பையும் வந்து விட்டது.
கல்லூரிக் கனவுகளை கலைத்து விட்டு
கணிப்பொறியின் காதலனாய் காவல் பட்டோம்.
காசில்லா விட்டாலும் காதலுக்கு பஞ்சமில்லை
காதல் தோல்விகளும் கொஞ்சமில்லை.
ஓர் இலக்க குரோமொசோம் குளறுபடியால்
அடித்து வரப்பட்ட
ஆணாதிக்க வர்க்கத்தினர்.
இனிய இளமையை
இ.எம்.ஐ-லேயே இழந்து விட்டு
பணம் காய்க்கும் எந்திரமாக மாற்றப்பட்டோம்.
இதும் ஓர் வகை ஆண் பாலியல் தொழில் தானோ?
பொறுப்பற்ற பொறுக்கிகளா ஆண்கள்?
அக்காவின் பேறுகாலம்,
தங்கையின் திருமணம்,
அப்பாவின் மருத்துவம்,
அம்மாவின் வளையல்,
வீட்டுக் கடன்,
தம்பின் படிப்பு
என ஏதேனும் பொறுப்புகளை சுமக்கும் தியாகிகள்.
நண்பர்களுக்கு இடையே
நட்பின் அடர்த்தி வேண்டுமானால்,
கூடக் குறைய இருக்கலாம்.
ஆனால்,
கடைசி காசு வரை
நண்பர்களுக்காகச் செலவிடும்
மனங்களுக்கு குறைவிருக்காது.
அன்பு நிறைந்த ஆணின்
நல்மதிப்பை அளவிட
புகையும், குடியும் மட்டுமே
அளவுகோல்களாக்கி விட வேண்டாம்.
ஆயிரம் சொல்லி விளக்கினாலும்
அப்பாவி ஆண்களுக்கும் உண்டோ கற்பு!
“திருமணம்”
பரணி போற்றும் ஆண்மகன்,
உண்மை பேசும் உத்தமன்,
ஊர் வாழ்த்தும் நல்லவன்,
விழியசைவில் வீழ்த்திடும் வீரன்,
பரிசுத்த மனதோடு, வெண் பட்டுடுத்தி
கட்டிலங்காளையாய் வந்தமர்ந்தான்.
செவ்வானம் தறித்து
சேலை நெய்துடுத்தி,
கார் கூந்தல் தலை கோதி,
வானவில்லின் சாயம் பூசி,
குங்குமப்பூவாய் கன்னம் சிவக்க,
கெட்டிமேளம், நாதஸ்வரம் முழங்க
கட்டழகு பதுமை வந்தாள்.
பெற்றோர் பெருமை கொள்ள
உற்றோர் உமை வாழ்த்த
மற்றோர் மனம் மகிழ
சுற்றோர் சூழ்ந்திருக்க
இடம் மாறின இதயங்கள்.