மரணித்துப் போயிருக்கலாம்
உயிர் பிடித்து
அகதியாய் வாழ்வதற்கு.
உரிமைக்காக போர் தொடுத்து
உள்ள
உறைவிடமும் பறிக்கப் பட்டோம்.
ரணங்களைக் கண்டு கண்டு
ரௌத்திரம் கற்றுக் கொண்டோம்.
கூரைகள் இல்ல விட்டாலும்
கூட்டுக் குடும்பமாய் வாழக்கற்றோம்.
முள்வேலிக்குள் முடக்கப்பட்ட
முடவர்களாய் முகம் காட்டுகிறோம்.
படுத்து உறங்க பாய்கள் வேண்டோம்
பதுங்கி இறக்க பாடை கேட்கிறோம்.
நாங்கள்
வதைக்கவா விதைக்கப்பட்டோம்.
அல்லது
வஞ்சிக்கவா வாழ்க்கைப்பட்டோம்.
இது என்ன
இயற்கையின் விதியா?
இல்லை அந்த
இறைவனின் பிழையா?
